Kallakurichi deaths due to Illicit liquor


 இன்று ஜூன் 26 - போதை ஒழிப்பு தினம். 


சமீபத்தில் தமிழகத்தையே புரட்டிப் போட்டிருக்கும் செய்தி கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள். இதைப்பற்றி பலவித கருத்துகள் எழுவதை காண முடிகிறது. எனக்கு தோன்றுவதை பகிர நினைக்கிறன். முதலில் ஒரு அதிர்ச்சியான உண்மையை பலர் உணர வேண்டும். போதை ஒழிப்பு தினம் மற்றும் போதை பற்றிய விழிப்புணர்வு அறிவிப்புகளால் மட்டும் போதை பழக்கத்தை ஒழித்து விட முடியாது. இன்னும் அழுத்தமாக சொல்ல வேண்டுமென்றால் அதை ஒழிக்கவே முடியாது. மது அருந்துபவர்கள் அவர்களாகவே நினைத்தால் மட்டுமே ஒழிக்க இயலும். ஆனால் அது நடவாது.



ஒவ்வொரு முறை தேர்தல் வரும்பொழுதும் டாஸ்மாக்கை ஒழிக்க வேண்டும் என்று மக்கள் எதிர்பார்ப்பதும் ஆட்சிக்கு வந்தால் கண்டிப்பாக ஒழிப்போம் என்று கட்சிகள் வாக்குறுதி கொடுப்பதும் வாடிக்கை. நானும் அதுதான் நாட்டிற்கு நல்லது என்று நினைத்தேன். ஒரு முறை எனது தந்தை சில புகைப்படங்களை கொண்டு வந்திருந்தார். அதில் நிறைய பேரல்களும் அதோடு எனது தந்தை மற்றும் சில காவலர்கள் இருப்பதையும் கண்டு நான் குழம்பினேன்.


அதெல்லாம் கள்ளச்சாராயம் காய்ச்ச பயன்படுத்தப்படும் பேரல்கள் என்றும் ஒரு கள்ளச்சாராயம் காய்ச்சும் கும்பலை கைது செய்ததாகவும் எனது தந்தை கூறினார். அப்பொழுது நான் அவரிடம் ஒன்றை வினவினேன். கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்களை கைது செய்ய வழிவகை இருக்கும்பொழுது எப்படி அரசே மதுவை விற்க முடியும் என்று கேட்டேன். அதற்கு என் தந்தை ஒரு விளக்கம் கொடுத்தார். குடிப்பழக்கத்தை ஒழிக்க முடியாது. ஆனால் அதனால் ஏற்படும் இழப்புகளை குறைக்கலாம். அரசு விற்கும் மது என்பது ஆரோகியத்திற்கு கேடு என்றாலும் கள்ளச்சாராயம் என்பது விஷம் போன்றது. 





இதை சொல்லிவிட்டு கள்ளச்சாராயம் காய்ச்சும் முறையை விளக்கி சொன்னார் என் தந்தை. இப்பொழுது எனக்கு அது நினைவில் இல்லை. ஆனால் கேட்கவே பயங்கரமாக இருந்தது. ஆகையால் கள்ளச்சாராயம் எனும் விஷத்தில் இருந்து மக்களை காப்பாற்ற அரசு விற்கும் மது என்பது தவிர்க்க முடியாத ஒன்று. மேலும் காவல்துறையின் உதவியோ அல்லது அரசியல் செல்வாக்கோ இல்லாமல் கள்ளச்சாராயம் காய்ச்சுவது என்பது சாத்தியமில்லை. என் தந்தை பல நாட்கள் இரவு வேளைகளில் மாறுவேடமிட்டு சென்று இதுப்போன்ற பல கும்பல்களை கைது செய்திருக்கிறார்.


முதலில் அரசு சம்பந்தப்பட்ட ஆட்சியரையும் காவல்துறையினரையும் கண்டிக்க வேண்டும். உத்தரவுகள் பிறப்பிப்பதைவிட அவை எவ்வாறு செயல்படுகின்றன என்று கவனிப்பது மிகவும் முக்கியம். அதுதான் ஆட்சியாளர்களின் சிறப்பம்சமாக இருக்கும். அடுத்து, இதுப்போன்ற இழப்புகள் ஏற்பட்ட குடும்பத்திற்கு நூறு நாள் வேலை திட்டத்தின் கீழோ அல்லது அவர்களது வீட்டில் உள்ள ஒருவரின் தகுதிக்கேற்ப ஒரு வேலை வாய்ப்பையோ பயன்படுத்தி தர வேண்டும். அதை விடுத்து பணம் தருவது என்பது ஒரு தவறான முன் உதாரணம். மருத்துவமனையில் இருந்து சென்றவர்கள் சிலர் மீண்டும் கள்ளச்சாராயம் அருந்திவிட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதே அதற்கு சான்று. அரசு நிலைமையை உணர்ந்து ஆவன செய்ய வேண்டும்.


Comments

Popular posts from this blog

Joothan - A Dalit's life || My excerpts

Astitva - Movie review || Impactful movies

My choice is Draupadi rather than Sita or Kannagi || Mahabharat life lessons